சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்காக இதுவரை 66,773 பயணிகள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு 3.26 கோடி வசூலாகியுள்ளது.தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தின் எல்லை பகுதி மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது குறித்து போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் தீபாவளி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனைக் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, கடந்த ஆண்டுபோலவே கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், சானிடோரியம், கே.கே.நகர் உள்பட பல இடங்களில் இருந்து பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும். இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 24 முதல் 26 வரை தினசரி ஓடும் 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் 4,265 என மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும். மற்ற மாவட்டங்களில் இருந்து மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.