சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டுள்ளதாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், சுகாதார கேடுடன் உள்ளன. பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால்தான் இந்த சுகாதார கேடு ஏற்படுகிறது.இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு, வாழ்வுரிமையை வழங்கியுள்ளது. அதில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும். மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாக பராமரிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு 2015ல் மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை. தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்கும்படி, தமிழக வருவாய் துறை, உள்துறை, போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை செயலாளர்களுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட்டிருந்தது.