சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், போராட்டம் அறிவித்துள்ள, அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. அசோக் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி திவ்ய தர்ஷினி, பெரியமேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் அரவிந்த், புழலை சேர்ந்த 7 வயது சிறுமி அக்ஷிதா ஆகியோர் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிய செய்திகள் வந்துள்ளன.டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தடுக்கவும், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் பதில் அளித்துள்ள தமிழக அரசு, டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக தமிழகம் முழுவதும் 125 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனியாக வார்டுகள் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.