புதுடெல்லி: அயோத்தி வழக்கில் எழுத்துப் பூர்வமாக கருத்துக்களை தாக்கல் செய்ய முஸ்லிம் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அயோத்தி வழக்கு மேல் முறையீடு விசாரணைஉச்ச நீதிமன்றத்தில் கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ் தவான் தங்களது தரப்பு எதிர்வாதம், இறுதி ஆவணங்கள், கருத்துக்களை உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பினரும் தங்களது தரப்பு கருத்துக்களை எழுத்துப் பூர்வமாக சமர்ப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.
இதையடுத்து ராஜிவ் தவான் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், அது அடுத்த தலைமுறையினரை பாதிக்கும். ஆட்சி அமைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு பாதிக்காத வகையில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் என நம்புகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
ராம் லாலா தரப்பு அறிக்கைராம் லாலா தரப்பு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் எழுத்துப் பூர்வமாக அளித்த அறிக்கையில், `இந்துக்கள் வழிப்படும் 1480 சதுர அடி இடமானது, ராமர் பிறந்த இடம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக மக்கள் அங்கு ராமரை வழிபட்டு வருகின்றனர். எனவே இது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல’ என குறிப்பிடப்பட்டுள்ளது.