இஸ்லாமாபாத்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பலியாயினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 3 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், இதில் 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயியிருக்கலாம் என இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியிருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறியதாவது: மிகவும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் இந்திய ராணுவ தளபதி, 3 தீவிரவாத முகாம்களை அழித்ததாக கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது. அங்கு எந்த முகாம்களும் இல்லை. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், வெளிநாட்டு தூதர்களையோ அல்லது பத்திரிக்கையாளர்களையோ சம்பவ இடத்துக்கு தாராளமாக அழைத்துச் சென்று தாக்குதலை நிரூபிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.