புதுடெல்லி: தேஜாஸ் ரயில் 3 மணி நேரம் தாமதம் ஆனதால், 950 பயணிகளுக்கு ஐஆர்சிடிசி மொத்தம் 1.62 லட்சம் இழப்பீடு வழங்குகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லி - லக்னோ இடையே தேஜாஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த 19ம் தேதி சுமார் 3 மணி நேரம் தாமதம் ஆனது. அதாவது, லக்னோவில் இருந்து காலை 6.10க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் காலை 9.55க்கு புறப்பட்டது. இதனால் டெல்லிக்கு 12.25க்கு போக வேண்டிய இந்த ரயில் மாலை 3.40க்குதான் சென்றது. இதுபோல் மறு மார்க்கமாக, டெல்லியில் இருந்து மாலை 3.35க்கு பதிலாக 5.30க்கு புறப்பட்ட இந்த ரயில் லக்னோவுக்கு இரவு 10.05க்கு பதில் 11.30க்கு சென்று சேர்ந்தது. இதனால் லக்னோவில் இருந்து டெல்லி செல்லக்கூடிய 450 பயணிகள் தலா 250, டெல்லியில் இருந்து லக்னோ செல்ல வேண்டிய 500 பயணிகள் தலா 100 இழப்பீடாக பெறுவார்கள்.