‘மகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்’ பலாத்கார முயற்சியில் இளம்பெண் படுகொலை?

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே மகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். பலாத்கார முயற்சியில் கொலை நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் செந்தில் (32). இவரது மனைவி வனிதா(எ) சோபியா(29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருச்செங்கோட்டில் உள்ள அழகு நிலையத்தில் உதவியாளராக பணிபுரியும் வனிதா தனது மூத்த  மகன் பிறந்தநாளுக்கு துணி எடுக்க நேற்று முன்தினம் ஈரோடு சென்றுள்ளார். பின்னர் கணவரை போனில் தொடர்பு கொண்ட வனிதா, இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் கடைசி பஸ்சை பிடிக்க முடியவில்லை. அதனால் தெரிந்தவர்கள் காரில்  வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் இரவு வெகுநேரமாகியும் வனிதா வரவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். இதுகுறித்து மெணசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார்  விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் மயில்கல்பாளையத்தில் உள்ள குட்டையில் வனிதா சடலமாக கிடந்தார். மேலும், குட்டையின் அருகே, மகன் பிறந்தநாளுக்காக வாங்கிய துணிகள், சாக்லெட்  சிதறி கிடந்தன.  இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த மெணசி போலீசார் விசாரணை நடத்தினர்.  இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார்,  பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பலாத்கார முயற்சியில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் திருச்செங்கோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: