நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நாளை விடுப்பு: கலெக்டரிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நாளை (22ம் தேதி) ஒருநாள் பணி மேல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டரை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்  கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாபுசெல்வன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள  ஆசிரியர்கள் கடந்த இரு வாரங்களாக ஓய்வு இல்லாமல் தினமும் பணியாற்றி வருகின்றனர். இதனால் உடல் ரீதியாகவும், மன  ரீதியாகவும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

ஏனென்றால் கடந்த 12ம் தேதி, 19ம் தேதி ஆகிய இரு நாட்களும் பள்ளி வேலை நாளாக இருந்த காரணத்தினாலும் கடந்த 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பயிற்சி  வகுப்புகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் நேற்று (20ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து எவ்வித ஓய்வும் இல்லாமல் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர்.தேர்தல்  நடைபெறும் நாளான இன்று (21ம் தேதி) தேர்தல் பணி முடிந்து ஆசிரியர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப நள்ளிரவு வரை ஆகிவிடும் என்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே நாளை (22ம் தேதி) ஒருநாள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணிமேல் விடுப்பு (ஆன் டூட்டி) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: