டெல்லி: மும்பையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் தயாரித்த விமானம் பறப்பதற்கு அனுமதி கிடைத்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விமானி நன்றி தெரிவித்தார். மகாராஷ்டிராவை சேர்ந்த விமான கேப்டன் அமோல் யாதவ் மும்பையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். சொந்தமாக விமானம் தயாரிக்க வேண்டும் என்பது தான் அவருடைய லட்சிய கனவு. இதற்காக சுமார் 18 ஆண்டுகள் கடின உழைப்பால் போராடி தனது வீட்டு மொட்டை மாடியில் 6 பேர் அமர்ந்து செல்லும் சிறிய ரக விமானத்தை கிடைத்த பொருட்களை கொண்டு ரூபாய் 4 கோடியில் வடிவமைத்தார். பின்னர் அந்த விமானத்தை பிரித்து கீழே இறங்கி மீண்டும் இணைத்து மேக் இன் இந்தியா திட்ட நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தி அனைவரின் வரவேற்பையும் பெற்றார். ஆனால் விமானத்தை பறக்க வைக்க விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.