இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயற்சி: காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் போலீசாரால் கைது

நாங்குநேரி: நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். பிற்பகல்  3 மணி நிலவரப்படி, நாங்குநேரியில் 52.22 விழுக்காடு வாக்குகளும், விக்கரவாண்டியில், 65.79  விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி  நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். தேர்தல் முடியும் வரை மாலை 6 வரை காவல் நிலையத்தில் வைக்கப்படுவார்  என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், நடந்து முடிந்த நாடாளுமன்ற  தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.வசந்தகுமார் பேட்டி:

நாங்குநேரி காவல் நிலையத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எம்.பி.வசந்தகுமார், பாளையங்கோட்டையில் எனக்கு வீடு உள்ளது. எது வீட்டிற்கு சென்றபோது, போலீசார் கைது செய்துள்ளனர். சாலையில் செல்ல கூடாதா? என்றும்  கேள்வி எழுப்பினார். ஆளுங்கட்சி தோல்லி பயத்தினால் கைது செய்துள்ளனர். தம்மை ஒரு கொலைகாரன் போல் போலீசார் அழைத்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

Related Stories: