வாக்குச்சாவடியில் மின் விநியோகம் தடைபட்டதால் சிக்கல்: மெழுகுவர்த்தி உதவியுடன் வாக்காளர்களின் பெயர் சரிபார்ப்பு

மகாராஷ்டிரா: புனேவில் உள்ள வாக்குச்சாவடியில் மின்விநியோகம் தடை பட்டதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜ - சிவசேனா ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும் மோதுகின்றன. இது தவிர பிரகாஷ் அம்பேத்கர் தலையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.), ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புனே தொகுதியில் உள்ள சிவாஜி நகர் வாக்குச்சாவடியில் மின்சார விநியோகம் தடை பட்டதால் தேர்தல் அதிகாரிகள் இருக்கும் பகுதியில் இருள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மெழுகுவர்த்தி உதவியோடு, வாக்காளர்களின் பெயர்களை சரிபார்த்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேட்டரியில் இயங்குவதால் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

Related Stories: