வருசநாடு: வருசநாடு முதல் வாலிப்பாறை வரை நடைபெறும் தார்ச்சாலை பணி தரமில்லாமல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. வருசநாடு முதல் வாலிப்பாறை கிராமம் வரை தார்ச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலைகளின் இருபுறமும் அதிக அளவிலான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இப்பகுதியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இரவு நேரங்களில் இச்சாலைகளில் செல்லும் போது சாலையில் உள்ள பள்ளங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எதிரே வாகனங்களில் வந்தால் விலகிச் செல்ல முடியாத அளவிற்கு சாலைகளில் இருபுறமும் அபாய பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அடிக்கடி டூவீலர்கள் விபத்தில் சிக்குகின்றன.