மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவற்றை வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி வரையில் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறை சாற்றும் குடவரை கற்சிற்பங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவை உள்ளன. இவற்றுக்கு யுனெஸ்கோ மற்றும் அரசின் புவிசார் குறியீடு போன்ற அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர உலக கைவினை நகரமாகவும் மாமல்லபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பாரம்பரிய கலைச் சின்னங்களை தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இச்சிற்பங்களை அருகில் சென்று கண்டுரசிக்க காலை 6 முதல் மாலை 6 மணி வரையில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டதால் உலக அளவில் மாமல்லபுரத்தின் புகழ் பரவியது. மேலும் தலைவர்கள் பார்வையிடுவதற்காக கலைச் சின்னங்களின் அருகே மின்விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலித்தன. தலைவர்கள் பார்வையிட்டு சென்ற பின்பு மின்விளக்குகள் ஒளிராததால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இதனால் குடவரை சிற்பங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் இரவிலும் கண்டு ரசிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மேற்கண்ட சிற்பங்களை வார விடுமுறை நாட்களில் மின்னொளியில் இரவு 9 மணிவரையில் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க தொல்லியல் துறை அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இரவில் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இரவு 9 மணி வரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் படிப்படியாக இரவு நேர அனுமதியை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.