கொச்சி: கேரளாவின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கொச்சியில் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை முடிந்து தமிழகத்தில் கடந்த 17-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஓமன் கடற்பகுதி நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கொச்சியில் நேற்று முதலே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதனால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால் கொச்சியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே ஆலப்புழா, கோட்டயம் உட்பட பிற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்து 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மழை காரணமாக வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது.