டெல்லி: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகன் ரத்துல் புரி அமெரிக்காவில் உள்ள விடுதியில் ஒரே இரவில் ரூ.8 கோடி செலவிட்டது குற்றப் பத்திரிகையில் தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகன் ரத்துல் புரி மோசர் பேர் இந்தியா நிறுவனத்தின் (எம்பிஐஎல்) செயல் இயக்குநராக பதவி வகித்துள்ளார். இந்நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்காக வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகையை முறைகேடாக பயன் படுத்தியதாக புகார் வந்தது. குறிப்பாக போலி நிறுவனங்களைத் தொடங்கி இந்தத் தொகை அந்நிறுவன வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி உள்ளனர்.
இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரத்துல் புரி உள்ளிட்ட பிற இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி ரத்துல் புரி கைது செய்யப்பட்டு, இப்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் ஊழல் வழக்கிலும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்பிஐஎல் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை (இ.டி) சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் கடந்த 17-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரத்துல் புரி, பிற இயக்குநர்கள் மற்றும் எம்பிஐஎல் நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.