வட கிழக்கு பருவமழை தீவிரம் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்

சென்னை: வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும். குறிப்பாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. அத்துடன்  வெப்ப சலனமும் நீடித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று புவனகிரியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. நாகர்கோயில் 70மிமீ, தக்கலை 60மிமீ, கன்னியாகுமரி 50மிமீ, மயிலாடி 40மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர சென்னை மற்றும் புறநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை 11 மணி வரை பெய்தது. மாலையில் சில இடங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். பல் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இது தவிர நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். அத்துடன், வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து அங்கும் மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியை பொருத்தவரையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் கடலில் சீற்றம் காணப்படும். மணிக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

Related Stories: