சென்னை: சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் 15 நாட்களில் சென்னையில் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னையில் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்த செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்முடிவில் 471 சாலைகளில் 12,047 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இடங்களை எல்லாம் இணைத்து ஒருங்கிணைந்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு ₹7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக டாருக் (பி) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 80 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்ட அதிகாரிகள் கூறியதாவது : அண்ணா நகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தி.நகர், காதர் நவாஸ்கான் சாலை, வாலாஜா சாலை, மெரினா உள்ளிட்ட 15 பகுதிகளில் 80 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இடங்களில் மொத்தம் 4,375 கார்களை நிறுத்தும் அளவிற்கான இடங்கள் உள்ளன. இவற்றில் 20 சதவீத இடங்களில் இரு சக்கர வாகனங்களுக்கும், 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை கண்காணிக்க மொத்தம் 460 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.