சென்னை : டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா அதன் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இந்த விழாவுக்கு பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.எம்.வாசகம் வரவேற்புரை நிகழ்த்தினார். பட்டமளிப்பு விழா அறிக்கையை துணைவேந்தர் கே.மீர் முஸ்தபா ஹூசைன் வாசித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்து வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கோவை கங்கா மருத்துவமனையின் தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கு ஏ.சி.சண்முகம். கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.விழாவில் 2481 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், பெஞ்சமின், பாண்டியராஜன், முதன்மை கல்வியாளர் கோபாலகிருஷ்ணன், கோதண்டன், இணை மற்றும் துணைவேந்தர்கள் ரவிச்சந்திரன், பத்மனாபன், ஜெயச்சந்திரன், பதிவாளர் பழனிவேலு, மற்றும் காவல்துறை, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.