சென்னை: 75 கோடி மதிப்பிலான வெள்ளத்தடுப்பு பணிக்கு டெண்டர் திறக்க கான்ட்ராக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது தள்ளி வைக்கப்பட்டது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2015ல் பெய்த கனமழை காரணமாக மழை நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இந்த மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் கடுமையான சேதமடைந்தது. இந்த சேதமதிப்பு சுமார் 15 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று தமிழக அரசு தனது அறிக்கையில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் கண்டறிந்து, அந்த இடங்களில், மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், 2400 கோடி செலவில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து முதற்கட்டமாக 100 கோடி செலவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் வெள்ளத்தடுப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக வெள்ளத்தடுப்பு பணி மேற்கொள்ள 244 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.