தீவிரவாத அச்சுறுத்தல் தமிழகத்தில் அறவே இல்லை

இந்தியாவிலேயே பாதுகாப்பான ஒரு மாநிலம் உள்ளதென்றால் அது தமிழகம்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்க அனுமதிக்க மாட்டார். ரவுடிகள்  அட்டகாசத்தை அறவே ஒழித்து கட்டினார். அவரது ஆளுமையால் தமிழகத்தை இந்தியாவே திரும்பி பார்த்தது. அவரது வழியில் தான் இப்போது முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நல்லாட்சி நடத்தி கொண்டிருக்கின்றனர். தீவிரவாதமும், தீவிரவாதிகளும் தமிழகத்தை ஒருநாளும் அண்டவே முடியாது.சட்டம் ஒழுங்கை கட்டிக்காப்பதில் இந்த அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருச்சியில் பிரபல நகைக்கடையில் 13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது. கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்ததோடு, தங்க நகைகளையும் மீட்டுக் கொடுத்த பெருமை அரசுக்குண்டு. எந்த ஒரு திருட்டு சம்பவத்தையும் தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறது அதிமுக அரசு.கடந்த 2016ம் ஆண்டு சேலம் அருகே ஓடும் ரயிலில் துளையிட்டு வங்கி பணத்தை கொள்ளையடித்தனர். அச்சம்பவத்திலும் மத்திய போலீசார் மற்றும் செயற்கை கோள் உதவியுடன் துப்புத் துலக்கி கொள்ளையர்களை தமிழக போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவத்தில் உடனே நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது.

போலீஸ் குழுவினர் விடாமுயற்சியுடன் துருவித்துருவி தேடி கடைசியில் கண்டுபிடித்து விட்டனர். இன்னும் சொல்லப்போனால், 4 மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய பெருமையும் அதிமுக அரசிற்கு உண்டு. பல ஆண்டாக ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த அவனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக யோசித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தீவிரவாதம் எந்த உருவத்தில் தலையெடுத்தாலும் அதை வேரோடு கிள்ளி எறிந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் இருந்தவரை தீவிரவாதம் என்பதே தலைதூக்கியது கிடையாது. அந்த அளவுக்கு முழுமையாக கட்டுப்பாட்டில் தமிழகத்தை வைத்திருந்தார். அவரது ஆசியோடு ஆட்சி நடத்தும் இன்றைய முதல்வரும், துணை முதல்வரும் தீவிரவாதத்தை வேரறுப்பதில் தெளிவாக இருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் இருப்பது போல தீவிரவாதம் குறித்த அச்சுறுத்தல் தமிழகத்தில் ஒரு போதும் இல்லை. அதிமுக ஆட்சியில் தீவிரவாதம் என்ற சொல்லுக்கே இடமில்லை.சீன அதிபரும், பிரதமரும் சந்தித்து பேச கூட தமிழகத்தை தேர்வு செய்வதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளே இல்லை. தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலே இருநாட்டின் தலைவர்களும், தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

1956ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தை நாடி சீன பிரதமர் வருகிறார் என்றால் என்ன அர்த்தம்? தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டியதில்லை.எதிர்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். அதிமுக ஆட்சியில் சட்ட பஞ்சாயத்துக்கள் என்பதே இல்லை. அதிமுகவினரே தவறு செய்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது. நில அபகரிப்பு பிரிவு என காவல்துறையில் தனிப்பிரிவையே தொடங்கி, ஏழைகளின் நிலங்கள் பறிபோவதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடுத்தார். பெண்கள் பாதுகாப்பில் ஜெயலலிதா எவ்வளவு உறுதியாக இருந்தாரோ, அத்தகைய நடவடிக்கைகளை இந்த அரசும் தொடர்ந்து மேற்ெகாண்டு வருகிறது. தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் அதிமுக அரசு ஒருபோதும் அனுமதித்தது இல்லை. மக்களின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அனுமதிக்காது.

Related Stories: