புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம் கடப்பா ரோடு கஸ்தூரிநகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் (53). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி, தேஜஸ்வினி என்ற மகளும், தருண் என்ற மகனும் உள்ளனர். சுந்தர், கோயம்புத்தூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமான வேலைகளை பார்வையிட நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி வீட்டில் பார்வையிட்டபோது சுந்தரின் வீட்டு கதவின் வெளிப்புற கிரில் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சுந்தரிடம் போன் மூலம் இந்த விபரத்தை கூறினார். பின் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை பெட்டிகள் மற்றும் துணிமணி சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி புழல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் சுந்தர் தனது வீட்டில் 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹ 20 ஆயிரம் பணம் வைத்துவிட்டு வந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.