புதுடெல்லி: வைட்டமின்-இ உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்கும் வகையில் சூரியகாந்தி செடி செல்களை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மரபு மாற்றம் செய்துள்ளனர். உடலில் சுரக்கும் சில நச்சு ரசாயனங்களால் உடலில் உள்ள திசுக்கள் சேதமடையும். இவற்றை தடுக்க வைட்டமின்-இ உதவுகிறது. சூரியகாந்தி செடி செல்கள் மூலம் வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்கும் முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய ஆய்வு கட்டுரை ‘பயோ கெமிக்கல் இன்ஜினியரிங்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:வைட்டமின்-இ ‘அல்பா-டோகோபெரல்’ என்ற ரசாயன தொகுப்பு முறையில் இருக்கும். சோதனைக் கூடங்களில் உள்ள அல்பா-டோகோபெரலை விட, தாவரங்களில் இயற்கையாக காணப்படும் அல்பா-டோகோபெரல் வீரியம் மிக்கதாக இருக்கும். எனவே, ரசாயன முறையிலான வைட்டமின்-இக்கு மாற்றாக, ஒரே விதமான செல்களை உருவாக்கும் வகையில் தாவரங்களை பரிசோதனைக் கூடங்களில் வளர்த்து வைட்டமின்-இ உற்பத்தியை அதிகரிக்க முடியும்.இந்த ஆய்வில் சூரியகாந்தியில் வைட்டமின்-இ உற்பத்திக்கு காரணமான ஜீன்களை, அராபிடோப்சிஸ் என்ற தாவரத்தில் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர்.