திருவொற்றியூர்: தமிழ்நாடு மின்சார வாரியம், தண்டையார்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி புதுநகர் மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் 20 மின்வாரிய அலுவலகங்கள், 10 துணை மின் நிலையங்கள், 4 மின்தடை பழுது பிரிவு மற்றும் 1 துணை பண்டகசாலை போன்றவை அமைந்துள்ளன. இங்கு, சுமார் 700க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் கள பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு நேற்று போனஸ் வழங்கப்பட்டது. ஆனால், தண்டையார்பேட்டை கோட்டத்தில் பணிபுரியும் 700 தொழிலாளர்கள் மற்றும் தண்டையார்பேட்டை கோட்ட வருவாய் பிரிவு அலுவலர்கள் சுமார் 30 பேருக்கு மட்டும் நேற்று போனஸ் வழங்கப்படவில்லை, என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், ‘‘தண்டையார்பேட்டை மின் கோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம், கடன்கள், பணப் பயன்கள், மருத்துவ செலவு போன்றவைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.