புழல்: ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், ரெட்டேரி தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி ரெட்டேரியை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாதவரம், லட்சுமிபுரம் பகுதியில் ரெட்டை ஏரி உள்ளது. இதன் ஒரு பகுதி புழல் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியிலும் மற்றொரு பகுதி லட்சுமிபுரம் பகுதியிலும் வருகிறது. இதற்கு நடுவே ஜிஎன்டி சாலையும், மற்றொரு பகுதியில் செங்குன்றம்-செம்பியம் சாலையும் உள்ளது. சுமார் 600 ஏக்கர் கொண்ட ரெட்டேரி தற்போது ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி, அந்த இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பாதி அளவுக்கு சுருங்கிவிட்டது. இது தவிர, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள கறிக்கடையில் சேரும் கழிவுகளை ஏரியில் கொட்டி வருவதால் தண்ணீர் மாசடைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குப்பையை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.ரெட்டேரியை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள், கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் ரெட்டேரியை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .