வங்கிகள் இணைப்பை கண்டித்து நாளை மறுநாள் வங்கிகள் ஸ்டிரைக்...அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தகவல்

புதுடெல்லி: வங்கிகள் இணைப்பு அறிவிப்பை கண்டித்து, நாளை மறுநாள் வங்கிகள் வேலை நிறுத்தம் நடக்கவுள்ளதாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து அகில இந்திய வங்கி  ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை, வரும் 22ம் தேதி (நாளை மறுநாள்) வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.இதுகுறித்து, பாங்க் ஆப்  மகாராஸ்ட்ரா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து வரும் 22ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த  வேலைநிறுத்தத்தால், வங்கி சேவைகள் பாதிக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களில் எங்கள் வங்கி ஊழியர்களின்  உறுப்பினர் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே வங்கியின் செயல்பாட்டில்  வேலைநிறுத்தத்தின்  தாக்கம்  குறைவாக இருக்கும். இருந்தாலும், வேலைநிறுத்தத்தின் காரணமாக  ஏற்படும் தாக்கத்தை தற்போது மதிப்பிட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு தேவையற்றது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, மத்திய அரசு 10  பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைப்பதற்கான திட்டத்தை அறிவித்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக கூறப்படுகிறது. வங்கிகள் இணைப்பை கண்டித்து நாளை மறுநாள்  (அக். 22) நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: