பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி....தளபதி பிபின் ராவத்-ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து  அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கிடையே,  ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான்  ராணுவத்தினர் இன்று காலை அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியின்  எல்லையோரம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவுவதை முறியடிக்கும்  வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையின் போது, பல்வேறு கட்ட  பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி:

பாகிஸ்தான் ராணுவம் மீது பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு உள்ள நீலம் பள்ளத்தாக்கில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்கள் இந்திய தாக்குதலில் தகர்ந்தன.

Related Stories: