மத பிரச்சனையை தூண்டும் வகையில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: த.மு.மு.க.வினர் ஈரோடு எஸ்.பி.யிடம் புகார்

ஈரோடு: நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் மத பிரச்சனையை  தூண்டும் வகையில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.மு.மு.க.வினர் ஈரோடு எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசனிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக களக்காட்டில் பிரசாரம் செய்து கொண்டிருந்த அதிமுக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடை பிரச்னை தொடர்பாக மனு அளித்தனர்.

அந்த மனுவை அமைச்சர் வாங்க மறுத்து, அவர்களிடம் இஸ்லாமியர்கள் யாரும் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை. பின்னர் எதற்கு எங்களிடம் கொண்டு வந்து மனு தருகிறீர்கள்? என்று பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். வாக்கு அளித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் ஒரு அரசாங்கமே என்ற விதிகள்கூட தெரியாதவர் என்பது அமைச்சரின் பதிலிலேயே தெரிகிறது. மேலும் தமிழக  இஸ்லாமியர்களை காஷ்மீரைபோல தனிமைப்படுத்துவோம் என்றும், மத பிரச்னையை தூண்டும் வகையிலும், அரசியல் அமைப்பு சாசன சட்டத்திறகு எதிராகவும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: