தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்: முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா தடுமாற்றம்

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 117 ரன்னுடனும், ரகானே 83 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ரகானே சதம் அடித்தார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து விளையாடிய ரகானே 115 ரன்களிலும், ரோகித் சர்மா 212 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஜடேஜா 51 ரன்கள் சேர்த்தார். உமேஷ் யாதவ் 10 பந்தில் 5 சிக்சருடன் 31 ரன்கள் விளாசினார். இந்தியா 116.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அத்துடன் 2-வது நாள் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் லிண்டே நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி தொடக்கத்திலே தடுமாறியது. அந்த அணியில் எல்கர் ரன்கள் ஏதும் இன்றி ஷமி பந்தில் வெளியேறினார். டி காக் 4 ரன்களிலும் வெளியேறினார். அந்த அணி 5 ஓவர்களில் 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்துள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

Related Stories: