திருமலை: ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நண்பர்கள் 11 பேர் 2 கார்களில் சூர்யாபேட்டையில் நடைபெற்ற மகேஷ் என்பவரின் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்துக்கு வந்தனர். கக்கிராலா பாலம் அருகே வந்தபோது ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கால்வாய்க்குள் பாய்ந்தது. நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது மற்றொரு காரில் வந்துகொண்டிருந்த 5 நண்பர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக சூர்யாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.