100 நாளில் பணம் இரட்டிப்பு எனக்கூறி ரூ50 கோடி மோசடி செய்த சேலம் தம்பதி அதிரடி கைது

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்எம்வி குரூப்ஸ் கம்பெனியை நடத்தி வந்தவர் மணிவண்ணன். தனது நிறுவனத்தில் பணம் முதலீடு  செய்தால், 100 நாட்களில் இரட்டிப்பாக்கி தருவதாகவும் மற்றும் ஊறுகாய், மசாலா மற்றும் சமையல் எண்ணெய் வகைகளுக்கு பகுதி வாரியாக விநியோக உரிமை தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்தனர். ஆனால், அவர் கூறியபடி யாருக்கும் பணத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில், சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மணிவண்ணன் மீது ஏற்கனவே 2 மோசடி வழக்குகள் உள்ளது.

இதில் ஒருவர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவ்வழக்கில் மணிவண்ணன் முன்ஜாமீன் பெற்றார். மணிவண்ணன் மீது தொடர்ந்து புகார்கள் வரவே, கடந்த சில மாதங்களாகவே அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இதில், அவர் குவைத்தில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சேலம் வந்த மணிவண்ணன், குடும்பத்தினருடன் வீட்டில் தங்கவில்லை. தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியது போலீசாரின் ரகசிய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மணிவண்ணனையும், அவரது மனைவி இந்துமதியையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 2 கார், 13 செல்போன்,  10 பவுன் நகை, ரூ50 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மணிவண்ணனிடம் நடத்திய விசாரணையில், பணத்தை வைத்தே மோசடி செய்யும் தந்திரம் வெளியானது. டெபாசிட் செய்யும் பணத்தை, அவரது அலுவலக டேபிளில் பரப்பி வைத்துக்கொள்வார். அந்த பணத்தை அவர் பார்ப்பது போன்று, பல்வேறு கோணங்களில் அவரது மனைவி இந்துமதி ேபாட்டோ எடுப்பார். இதனை டெபாசிட் செய்பவர்களுக்கு  அனுப்பி வைப்பார். இதனை பார்க்கும் பெடபாசிட்தாரர்கள் தங்களது பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள் என்று போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் உள்ளது. இதனை போலீசார் ஆய்வு  செய்து வருகின்றனர். மணிவண்ணன், அவரது மனைவி இந்துமதி ஆகியோரை, கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மணிவண்ணன் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ₹50 கோடிக்கும் மேல் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. அவரிடம் பணம் கொடுத்தவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories: