×

மீண்டும் மிரட்டும் டெங்கு

* சென்னை, மதுரை உட்பட தமிழகமெங்கும் தீயாய் பரவுது
* விழிப்புணர்வு இருந்தால் வியாதி வராமல் விரட்டியடிக்கலாம்
தேனி: மழைக்காலம் பெய்தாலே கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதற்காகவே காத்திருந்தது போல மலேரியா, டைபாய்டு, சிக்குன்குனியா, டெங்கு இப்படி ஏராளமான காய்ச்சல்கள் பரவத்தொடங்கி விடுகின்றன. ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு, மீண்டும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தலைதூக்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் மதுரை உட்பட தமிழகமெங்கும் 3,200க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கணக்குப்படி இதுவரை 3 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் (உண்மையான மதிப்பீடு கூடுதலாக இருக்கலாம்). டெங்குக்கு வயது ‘100’: டெங்கு ஏதோ புதுவிதமான காய்ச்சல் என்ற உணர்வே பரவலாக மக்கள் மத்தியில் உள்ளது. இதன் வயது 100 ஆண்டை தாண்டுகிறது.  இந்தியா, பிலிப்பைன்ஸ், பர்மா, சிங்கப்பூர், மலேசியா, தென்அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, இந்தோனேசியா மற்றும் சில ஆப்ரிக்க நாடுகளை டெங்கு பாடாய்ப்படுத்தி  வருகிறது.

4 வகை வைரஸ்: டெங்கு கொசு பகலில் கடிக்கும் இயல்புடையது. அப்படி கடிக்கும்போது கிருமிகளை உடலுக்குள் செலுத்தி விடும்.  இதன்மூலம் உடலுக்குள் டென்வி 1, டென்வி 2, டென்வி 3, டென்வி 4 வைரஸ்கள் (ஆர்என்ஏ வைரஸ்கள்) உருவாகி  விடும். இப்படி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களில் 80 சதவீதம் பேர் காய்ச்சல் வந்த சுவடே  தெரியாமல் சிகிச்சையே எடுக்காமல் குணமாகி விடுவார்கள். 15 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று  குணமாவார்கள். 5 சதவீதம் பேர் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். முதன்முதலில் டெங்கு  காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களில் பெரும்பாலானோர் உயிரிழப்பின்றி தப்பி விடுவார்கள்.பரிசோதனையில் ‘பக்...பக்’: டெங்கு காய்ச்சல் பாதிப்பு உருவான பின்னர், உடல் அந்த வகை காய்ச்சலுக்கு காரணமான வைரசுக்கு  எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்று விடும். ஆனால் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு வகையான வைரஸ்கள்  காரணமாக இருப்பதால், முதலில் எந்த வைரஸ் இந்த காய்ச்சலை ஏற்படுத்தியது? எந்த வைரஸ்க்கு  எதிரான எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளது என்பதை ரத்த பரிசோதனைகளில் மட்டுமே கண்டறிய  முடியும். டெங்கு வைரஸ்கள் நான்கு வகைப்படுவதால், ஒரு முறை பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மற்ற  வகை வைரஸ்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அப்படி மீண்டும் பாதிக்கப்படும்போது அவர்களை  மீட்பது டாக்டர்களுக்கே மிகவும் சவாலான விஷயமாக மாறி விடும்.

யாரை தாக்கும்?  டெங்கு காய்ச்சலுக்கு என எந்த மருந்தும் கிடையாது. டெங்கு  கொசு கடித்தால் குழந்தைகள், சிறுவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், இருதய நோயாளிகள்,  நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எந்தவித அறிகுறியுமின்றி இந்த  காய்ச்சல் திடீர் என உருவாகி விடும். சாதாரணமாக முன்பக்க தலைவலி, காய்ச்சல், எலும்பு மூட்டு வலி,  தசை வலியுடன் காய்ச்சல் தொடங்கும். டெங்கு காய்ச்சலுக்கு முதல் மூன்று நாள் ‘பிரிபரல் பேஸ்’  என்பார்கள். இந்த நாட்களில் காய்ச்சல், தலைவலியுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். உடல் தோல்  சிவக்கும். வெண்மையான மற்றும் சிவப்பு நிற படைகள் போன்ற புள்ளிகள் தோலில் உருவாகும். 104  டிகிரி வரை காய்ச்சல் இருக்கும். இந்த நாட்களில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொண்டாலே  போதும். 4, 5, 6வது நாள் ‘கிரிட்டிக்கல் பேஸ்’ என்பார்கள். இந்த நாட்களில் உடலில் தட்டணுக்கள்  எண்ணிக்கை மளமளவென குறையும். இதுவே மிகவும் ஆபத்தானது.உறுப்புகள் செயலிழப்பு: ரத்தத்தில் மிதக்கும் பிளாஸ்மா,  ரத்தக்குழாய்களில் இருந்து வெளியேறி நுரைரல், வயிறு, நெஞ்சுப்பகுதிகளில் தங்கும். அப்போது ரத்த  ஓட்டம் குறையும். மூக்கில், பிறப்பு உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும். இது  மிகவும் அபாயக்கட்டம். இந்த கட்டத்தில் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், கல்லீரல்,  மண்ணீரல், கணையம், நுரையீரலுக்கு ரத்த ஓட்டம் குறைந்து உறுப்புகள் செயல் இழக்கும். இறுதியில்  ‘டெங்கு சின்ட்ரோம்’ உருவாகி உயிரிழப்பினை ஏற்படுத்தும். இதனை தடுக்க முக்கிய உடல் உறுப்புகளுக்கு  ரத்தம் தடையின்றி செல்வதை உறுதிப்படுத்த நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவார்கள்.

சிகிச்சை என்ன? கிரிட்டிக்கல் பேஸில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வசதிகள் தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், அரசு  மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ளன. இங்கு கிரிட்டிக்கல் பேஸில் இருக்கும் மூன்று  நாட்களுக்கும் உரிய சிகிச்சைகள் கொடுத்து, நோயாளிக்கு ரத்தம் ஏற்றி காப்பாற்றி விட்டால், 6,  7, 8வது நாள் நோயாளிகளை ரெக்கவரி பேஸ் நிலைக்கு கொண்டு வந்து விட முடியும். இந்த ரெக்கவரி  பேஸில் ரத்தக்குழாய்களில் இருந்து வெளியேறிய பிளாஸ்மா, மீண்டும் ரத்தக்குழாய்களுக்குள் சென்று  இயல்பு நிலை திரும்ப தொடங்கும். இப்படி வந்து விட்டால் எளிதில் குணமாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் என்ன சாப்பிடலாம்?
டாக்டர்கள் கூறுகையில், ‘‘காய்ச்சல் நேரத்தில் நன்கு சுத்தப்படுத்தப்பட்டு சமைக்கப்பட்ட ப்ரோக்கோலி சாப்பிடலாம். மாதுளம்பழ ஜூஸ் சாப்பிடலாம். ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் ‘கே’ ரத்தம் உறைவதை தடுத்து,  நோயாளிகளுக்கு பெரிய அளவில் உதவி புரியும். மாதுளம்பழம் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.  எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த இரண்டையும் சாதாரண நேரங்களில் கூட மிகவும்  அதிகம் சாப்பிட்டாலும் தவறு இல்லை’’ என்றார்.

தடுப்பூசி இருக்கா?
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி விலை என்ன தெரியமா?  ₹12  ஆயிரம். இவ்வளவு பணம் செலவிட்டு தடுப்பூசி போட முடியாது என்பதுதான் இதில் மிகவும்  சிக்கலான விஷயம். முதலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மட்டுமே, அடுத்து  டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இதற்கு முதலில் எந்த வகை டெங்கு  வைரசால் காய்ச்சல் வந்தது? எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்ட பிறகே தடுப்பூசி போட முடியும்.

அழிப்பது எப்படி?
போலியோவை போல டெங்குவை ஒழிக்கவும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், டெங்கு கொசுவின் வாழ்விடங்களை அழித்து விடலாம். தமிழகத்தை பொறுத்தவரை, தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சி பணிகள் முடங்கி கிடக்கின்றன. இதனால் டெங்கு கொசு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மக்களுக்கும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நீர்நிலைத்தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சிரட்டை, டயர் மற்றும் சிறிய, பெரிய பாத்திரங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, டெங்குவை பொறுத்தவரை, மக்கள் கைகளில்தான் உள்ளது.  மக்கள் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என அரசு டாக்டர்கள் சொல்கின்றனர். அரசும் போதிய விழிப்புணர்வு எடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் டெங்குவின் வீரியத்தை தடுக்க முடியும்.

3 மாதத்தில் 44 பலி
விருதுநகர் மாவட்டத்தில் 2014 டிசம்பர் முதல் 2015 பிப்ரவரி வரையிலான காலத்தில் டெங்கு பாதிப்பால் ராஜபாளையத்தில் அதிகபட்சமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை தொடர்ந்து அமைச்சர்கள், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், கலெக்டர் வரையிலான உயரதிகாரிகள் 15 நாட்கள் முகாமிட்டு சுகாதாரப்பணிகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் டெங்கு கட்டுக்குள் வந்தது. இதற்குள் மாவட்டத்தில் சுமார் 44 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தனர்.

தட்டணுக்கள் உஷாரு...!
மனித உடலில் 1.50 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான ரத்த தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த அளவு டெங்கு பாதிப்பில் 50 ஆயிரத்திற்கு கீழ் சென்றால் அபாயகட்டமாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனே ரத்த தட்டணுக்களை செலுத்த வேண்டும்.

தமிழக அரசு திணறுது
டெங்குவை பொறுத்தவரை தென்மாவட்டங்களில், கடந்த 2017ம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் 3,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெங்கு கொசு ஒழிப்பு, கொசுப்புழு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் பாதிக்கு மேல் குறைவாக உள்ளனர். இதனால்  மாநிலம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு, கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மந்த நிலையில் உள்ளது.  தற்போது நெருக்கடி  அதிகரித்துள்ளதால் கூடுதலாக பணியாளர்களை நியமிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக  உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலவேம்பு கசாயம் பப்பாளி இலை தடுக்குமா?
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: நிலவேம்பு கசாயம், பப்பாளி  இலைச்சாறு தட்டணுக்களின் எண்ணிக்கையினை உயர்த்த பயன்படுகிறது என சித்த மருத்துவர்கள்  கூறுகின்றனர். நாங்களும் அரசு பரிந்துரை செய்துள்ளதால், நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.  ஆனால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது பலன் தராது. காரணம், அந்த நோயாளி பெரும்பாலும் மயக்க நிலையில் இருப்பார். உடல் மிகவும் சோர்வுற்று  இருக்கும். அப்போது பப்பாளி இலை சாறு, நிலவேம்பு கசாயம் கொடுத்தால் ஒவ்வாமை அல்லது  வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரித்து கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, அந்த  நேரங்களில் வழங்க அனுமதியில்லை. சாதாரண காய்ச்சல் உள்ள நேரங்களிலும், உடலில் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கவும் பப்பாளி இலை சாறும், நிலவேம்பு கசாயமும் உதவும். இதனை தொடர்ந்து சாப்பிடுவதும்  தவறு. டாக்டர்கள் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.


Tags : Dengue,intimidates,again
× RELATED பங்குனி திருவிழாவை முன்னிட்டு...