சென்னை: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் சில இடங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. அதே நேரம் வங்கக்கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. 2 கடலிலும் இந்த நிலை உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாளைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் 7 மாவட்டங்களிலும் கனமழை கொட்ட போகிறது என்ற அறிவிப்பும் வந்துள்ளது. வடகிழக்கு பருவமழை, 2 நாளைக்கு முன்பு துவங்கியது.
இதனால் வங்க கடலில், வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டதால், வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டியது. அதிலும் எப்பவுமே பெய்யாத சென்னையில்கூட, பேய் மழை அடித்து ஓய்ந்தது. அதுபோன்றே இப்போது, இன்னும் 7 மாவட்டங்களலும், கன மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. இதைதவிர, வேறு இடங்களிலும் லேசான மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம், அரபிக்கடல், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழகத்துக்கு நல்ல நீர்வளத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.