புவனேஸ்வர்: கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 26 ரயில் நிலையங்களில் 100 அடி உயர தேசியக்கொடி கம்பம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் விசாகபட்டினம் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நிரந்தர நினைவு தேசிய கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 26 ரயில் நிலையங்களில் நிரந்தரமாக கொடிக்கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் பயணிகளிடம் தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் மாவட்ட தலைநகரங்கள், வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த இடங்கள், சுற்றுலா தளங்களில் நினைவு தேசியக்கொடிகள் அமைக்க ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, கிழக்கு கடற்கரை மண்டலத்தில் குர்தா ரோடு டிவிஷனில் 13 இடங்களிலும், வால்டேர் பிரிவில் 7 இடங்களிலும், சம்பல்பூர் ரயில்வே பிரிவில் 6 இடங்களிலும், 100 உயர கம்பத்தில் பறக்கும் வகையில் தேசியக்கொடி இந்த நிதியாண்டுக்குள் அமைக்கப்பட வேண்டும். பூரி, கட்டாக், ஜெய்ப்பூர், சத்ரபூர், பாரதிப், சம்பல்பூர்,காகுளம் ரோடு, வியாநகரம், தண்டேவாடா உள்ளிட்ட 26 ரயில் நிலையங்களில் இந்த கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு தேவையான பரந்த இடப்பரப்புள்ள ரயில் நிலையங்களில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அது தெளிவாக தெரியும் வகையில் போகஸ் லைட்டும் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.