சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டர்கள் தொடர்பான புகார் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தக்கோரி அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்குகள் நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மை செயலாளர் அனுமதி அளித்துள்ளதாக அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண் தெரிவித்திருந்தார். நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சங்கர் ஆஜராகி, 349 உள்ளாட்சி டெண்டர்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளதாகவும், 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 117 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தார்.