44 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது கல்கி பகவான் ஆசிரமத்தில் 500 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு

* 88 கிலோ தங்கக்கட்டிகள், வைரங்கள் பறிமுதல்  

* வருமானவரித்துறை அறிவிப்பு

சென்னை: கல்கி ஆசிரமத்தில் 500 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் ரூ.44 கோடி ரொக்க பணம், 88 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை உள்பட நாடு முழுவதும் இயங்கி வரும் கல்கி நிறுவனத்தில், வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆந்திராவில் உள்ள வரதய்யா பாளையத்தை மையமாக கொண்டு அறக்கட்டளை, நிறுவனங்கள் என்ற பெயரில் பல ஆண்டுகளாக சமயம், தத்துவம் ஆகியவற்றில் பயிற்சி திட்டங்கள் நடத்தி வந்துள்ளன. இந்த பயிற்சிகள் சென்னை பெங்களூர், ஆந்திரா பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த 1980ம் ஆண்டு சமயதத்துவத்தை அடிப்படையாக கொண்டு கல்கி பகவான் தலைமையில் உருவாக்கப்பட்டது.

மேலும், அது ரியல் எஸ்டேட், கட்டுமானம், விளையாட்டு உள்ளிட்ட தொழில்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இந்த தொழில்கள் விரிந்தது. இந்த குழுவை உருவாக்கிய கல்கி பகவான் மற்றும் அவரின் மகன் கிருஷ்ணா கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் நடத்தும் பல்வேறு பயிற்சிகள் வெளிநாடுகளில் வாழும் மக்களையும் வெகுவாக கவர்ந்து அதில் உறுப்பினர்களாக சேர்க்க வைத்தது. அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்தும் வருவாய் வந்தது. இந்த வருவாய் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பெருமளவில் நிலத்தில் முதலீடு செய்தது. வெளிநாடுகளிலும் அதேபோல அதிக அளவில் நிலத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை நடத்திய அதிரடி சோதனையில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, வரதய்யபாளையம் ஆகிய இடங்களில் 40 வளாகங்களில் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சோதனையில், இக்குழுவில் உள்ள முக்கிய நபர்கள்தான் இந்த வருவாயை பெற்று கணக்கில் காட்டாமல் ஆவணங்களை கையாண்டுள்ளனர் என்றும், பண பரிமாற்றம், முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், சொத்துக்களை ஆவணங்களில் உள்ள மதிப்பைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்று கணக்கில் காட்டாமல் பெற்றுள்ளனர். கடந்த 2014-15ம் ஆண்டில் மட்டும் கணக்கில் வராத வருவாயாக ரூ.409 கோடி பெற்றுள்ளனர். இந்த கணக்கில் வராத பண வருவாய் மற்றும் இதர விலைமதிப்பில்லா வருவாய்களும் அதிக அளவில் அதன் நிறுவனர் மற்றும் அவரது மகன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. ஒரு வளாகத்தில் இருந்து மட்டும் ரூ.43.9 கோடி பணம் இருப்பதும், வெளிநாட்டு கரன்சியும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்துள்ளனர். கல்கி ஆசிரம வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெளிநாட்டு கரன்சியின் மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உள்ளது. அது தோராயமாக ரூ.18 கோடி. மேலும் தங்க நகைகள் தோராயமாக 88 கிலோவும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.26 கோடி. ரூ.5 கோடி மதிப்புள்ள 1271 கேரட் வைரம், கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் தோராய மதிப்பு ரூ.93 கோடி.

இதுபோல், கல்கி ஆசிரம குழுவினர் பெற்றுள்ள வருவாயின் மொத்த மதிப்பு ரூ.500 கோடி. இந்த கல்கி ஆசிரம குழுவுக்கு சொந்தமான இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு மூலம் முதலீடு செய்துள்ளனர். அதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் நடந்த வெல்னஸ் பயிற்சிகளில் மேற்கண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இதையடுத்து, வருவாய் துறையினர் இந்த குழுவினர் வேறு எங்கு முதலீடு செய்துள்ளனர், வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்ற கோணத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர அறக்கட்டளை என்ற பெயரில் அந்த மையத்தில் தங்குவதற்கான கட்டணம், வெளி நபர்களிடம் இருந்து நன்கொடை பெற்று அதில் குறைந்த அளவே கட்டணமாக காட்டியுள்ளனர். வெளிநாட்டினரிடம் இருந்து பெற்ற பணத்துக்கான உரிய கணக்கு இல்லை. அவர்களிடம் இருந்து பெற்ற கரன்சியை கள்ளத்தனமாக பரிமாற்றம் செய்துள்ளனர். இதுதொடர்பான சோதனை மற்றும் விசாரணை தீவிரமாக நடக்கிறது. இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: