×

பொள்ளாச்சி சரளபதி வனம் அருகே அகழியை தாண்ட முயற்சித்த யானை தவறி விழுந்து சாவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே சரளபதி வனம் அருகே, அகழியை தாண்ட முயற்சித்த காட்டு யானை, தவறி விழுந்து இறந்தது.  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை, போத்தமடை, சரளபதி,  ஆயிரங்கால்குன்று, சர்க்கார்பதி உள்ளிட்ட வனத்திலிருந்து வெளியேறும் காட்டு  யானைகள், அங்கு எல்லைப்பகுதியில் உள்ள அகழியை தாண்டி விவசாய நிலங்களில்  ஊடுருவதை வழக்கமாக கொண்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில், சுமார்  35வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று, சரளபதி வனத்திலிலிருந்து  வெளியேறியது. அங்குமிங்குமாக உலா வந்த யானை, அப்பகுதியில்  சுமார் 5 அடி  ஆழம், 10 அடி அகலமுள்ள அகழியை தாண்டி வர முயன்றுள்ளது. ஆனால் அந்த யானை  திடீர் என தடுமாறி கீழே விழுந்தது.

அகழி குழிக்குள் விழுந்த யானையின் கால்  முறிந்ததால் எழுந்திருக்க முடியாமல் கிடந்தது. படுகாயத்துடன் உயிருக்கு  போராடிகொண்டிருந்த யானை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. நேற்று காலை,  சரளபதி வன  பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர். அகழியில் யானை ஒன்று  இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் யானையின் உடல் பிரேத  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதன் இரு தந்தங்களையும் வனத்துறையினர்  மீட்டு அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனைக்குபின்,  அதன்  உடலை பிற விலங்குகளுக்கு இரையாக வனத்துறையினர் அங்கேயே விட்டு வந்தனர்.

Tags : Elephant ,Pollachi Saralapathi Forest ,Pollachi Forest Elephant , Trench,Pollachi ,Forest Elephant ,Elephant
× RELATED நாகர்கோவில் அருகே யானை தந்தம் கடத்திய இருவர் கைது