*இன்று கலெக்டர் அலுவலகத்தில் விசாரணை
தென்தாமரைகுளம் : பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அருணாச்சலம் (50). இவரது மனைவி ரேணுகா (45). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அருணாச்சலம் ஏர் மாட்டை வைத்து உழுது கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். சம்பவத்தன்று காலை உழுவதற்காக மாட்டை பார்க்க வந்த அருணாச்சலம் தனது மாட்டின் வால் வெட்டப்பட்டு துண்டாக கீழே கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தென்தாமரைகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். கால்நடை மருத்துவர் மாட்டின் வால் வெட்டப்பட்டதை உறுதிசெய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. வால் இல்லாமல் மாடு வலியால் துடிப்பது காண்பவர்கள் கண்களில் கண்ணீர் வரசெய்கிறது. மாட்டை வைத்து உழும் விவசாயிக்கு ஒருநாளைக்கு ரூ. 1000 முதல் 1500 வரை வருமானம் கிடைக்கும். தற்போது மாட்டுக்கு மருந்து வைத்து கட்டப்பட்டுள்ளதால் வருமானமின்றி கண்ணீர் வடிக்கிறார். இப்பகுதியில் அநேக மக்கள் வந்து விவசாயிக்கு ஆறுதல் கூறிசெல்கின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.