சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டியில் திமுக சார்பில் நா.புகழேந்தியும், அதிமுக சார்பில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும் நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும் போட்டியிடுகின்றனர். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.இரு தொகுதிகளிலும் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் தற்போது அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் ஏற்கனவே முதல்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். 2ம் கட்ட பிரசாரத்தை கடந்த 13ம் தேதி விக்கிரவாண்டியில் துவக்கினார்.