சென்னை: நலிந்த தமிழக அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்று கூறி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் சார்பில் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விளையாட்டு ஆணையம் கடந்த 2012ல் 3 ஆயிரமாக ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது.இந்த ஓய்வூதியம் பெறுவதற்கு பலர் விண்ணப்பித்தனர். இந்த நிதியில் திடீரென கடந்த 2013ல் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க அப்போது உறுப்பினர் செயலாளராக இருந்த ராஜாராமன் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் கூடி திடீரென முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால், 101 நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 11 குடும்ப ஓய்வூதியதாரர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். இது குறித்து ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நலிந்த விளையாட்டு வீரர்கள் கூறியதாவது: தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் இடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த 2013ல் உயர் மட்ட குழு கூடி ஓய்வூதியம் தரக்கூடாது என்று முடிவு செய்தது. இந்த முடிவு எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதை அரசு ஏற்க மறுத்து விட்டது. ஆனால், இந்த முடிவை காரணமாக வைத்து மாநில போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டு விட்டது.
இது, சட்ட விரோதமான செயல். அரசாணை ஏதும் இன்றி தங்களுக்கு எதையும் செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதை காட்டுவதை போன்று இது உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு எங்களை போன்ற நலிவுற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழை நிராகரித்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓய்வூதிய விண்ணப்பங்கள் தமிழில் வெளிவந்தது. ஆனால், கடந்த 2018 முதல் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு விண்ணப்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பங்களை நிரப்புவதில் விளையாட்டு வீரர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, மீண்டும் தமிழில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.