ராபர்ட் பயாஸ் ‘பரோல்’ கேட்ட வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ் பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில்  ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர் ராபர்ட் பயாஸ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், “ என் மகன்  தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. இதற்காக 30 நாட்கள்  ‘பரோல்’ வழங்குமாறு கோரி சிறைத்துறை ஐஜிக்கு மனு கொடுத்தேன். எனது மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலித்து பரோல் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று  கூறியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை  ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: