நெல்லை அருகே கொடூர சம்பவம் 7ம் வகுப்பு மாணவி கடத்தி கொலை: 2 வாலிபர்களிடம் தீவிர விசாரணை

திசையன்விளை: நெல்லை அருகே 7ம் வகுப்பு மாணவி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு  கிராமத்தை சேர்ந்த மீனவரின் 3வது மகள், அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அதன் பிறகு விளையாடச் சென்றார். இரவு 8 மணியாகியும் வீடு திரும்பாததால், அதே  ஊரில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு சென்றிருப்பாள் என பெற்றோர் நினைத்தனர். நேற்று முன்தினம் காலை அங்கு சென்று தந்தை பார்த்தார். ஆனால் அங்கும் சிறுமி இல்லை என தெரிந்து ஊர் முழுவதும் தேடினார். ஆனால் அவரை பற்றிய  தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து உவரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், இரவு 9 மணியளவில் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்களது வீட்டின் அருகிலுள்ள மற்றொரு வீட்டின் காம்பவுண்டுக்குள் சிறுமி உடலில் காயங்களுடன் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உடலில் காயங்கள் இருப்பதால் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான்  உறுதியாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் வீடு

கொலையான சிறுமி சடலம் கிடந்த பகுதி, திருச்சி அருகே இலுப்பூர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவரது வீட்டின் காம்பவுண்ட் ஆகும். அவர், குடும்பத்துடன் இலுப்பூரில் வசிப்பதால் இங்குள்ள வீட்டை பூட்டி வைத்துள்ளார்.  கேட்டில் பூட்டு போடப்பட்டிருந்தது. சிறுமியை கடத்தியவர்கள் கேட் பூட்டை உடைத்துதான் உள்ளே கொண்டு சென்றிருக்கிறார்கள் என அப்பகுதியினர் தெரிவித்தனர். அதே சமயம் சிறுமி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார்  திசைதிருப்ப முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Related Stories: