வாஷிங்டன்: நிலவில் விழுந்து செயல் இழந்து விட்ட விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க, அது தரையிறங்க திட்டமிடப்பட்டு இருந்த இடத்தில் எடுக்கப்பட்ட புதிய படங்களை நாசா ஆய்வு செய்து வருகிறது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. கடந்த மாதம் 17ம் தேதி திட்டமிட்டப்படி சந்திரயான்-2ன் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நிலவில் இருந்து 2.1 கிமீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை இஸ்ரோ தொடர்ந்து செய்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.