×

ராஜராஜ சோழன் 1034வது சதய விழா தஞ்சையில் நவ.5, 6ல் கொண்டாட்டம்

தஞ்சை: மாமன்னன் ராஜராஜசோழன் 1034வது சதய விழா வரும் நவம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாமன்னன் ராஜராஜசோழன் 1034வது சதய விழா தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசியதாவது: சதயவிழா நடைபெறும் நவம்பர் 5, 6ம் தேதிகளில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கலைநிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கவியரங்கம் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய தொல்பொருள் துறை முதுநிலை பாதுகாப்பு அலுவலர் விழாவிற்கு பந்தல் அமைப்பது, மின் அலங்காரம் செய்வது, நேரடி ஒலிபரப்பு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவ, மாணவிகளுக்கு இடையே ராஜராஜ சோழன் சிறப்புகள் பற்றிய பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) சதய விழா நடைபெறும் 2 நாட்களும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் சதய விழா நடைபெறும் 2 நாட்களும் சுகாதாரப்பணிகளை கொண்டு தூய்மையாக கோயில் வளாகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி ஆணையர் பெரிய கோயிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், பக்தர்களுக்கு குடிநீர் தொட்டி அமைத்தல், நகர மைய பகுதிகளில் மின் அலங்கார விளக்குகள் அமைக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விழா தொடர்பான அனைத்துதுறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசுஉள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Tags : Thanjavur ,death anniversary ,Rajaraja Chola , Rajaraja Cholan, Satya Festival, Tanjore
× RELATED தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை...