×

உவரி அருகே பயங்கரம்: 7ம் வகுப்பு மாணவி கடத்தி கொடூர கொலை; பலாத்காரம் செய்யப்பட்டாரா? 2 வாலிபர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

திசையன்விளை: திசையன்விளை அருகே 7ம் வகுப்பு மாணவி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதி உவரி போலீஸ் சரகத்தில் உள்ளது கூட்டப்பனை கிராமம். இங்கு மீன்பிடி தொழில்
பிரதானமாக நடக்கிறது. இந்த ஊரைச்சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (44) மீனவர். இவரது மனைவி டிமித்தா(42). இவர்களுக்கு 2 மகன், 5 மகள்கள். இதில் 3வது மகள் இளவரசி (12). இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் மாலையில் வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய இளவரசி அதன்பிறகு வெளியில் விளையாடச்சென்றார்.

இரவு 8 மணியாகியும் அவர் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. அதே ஊரில் லிவிங்ஸ்டன் தம்பி வீடு இருப்பதால் இளவரசி சித்தப்பா வீட்டிற்கு போய் படுத்திருப்பாள் என பெற்றோர் நினைத்தனர். இதனால் நேற்று காலை விடிந்ததும் தங்கள் மகள் அங்கு வந்தாளா? என சித்தப்பா வீட்டிற்கு சென்று பார்த்தாார்கள். ஆனால் அவள், அங்கு செல்லவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் பெற்றோர், இளவரசியை ஒவ்வொரு சந்து பொந்தாக அலசினர். அவள், பற்றி எந்த துப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று மாலை அதே ஊரைச்சேர்ந்த இரு வாலிபர்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டு சண்டை போட்டிருக்கிறார்கள்.

அதில் ஒருவர், நீ போலீசில் மாட்டத்தான் போகிறாய் என கத்தி பேசியிருக்கிறார். அது அந்த வழியாக சென்றவர்கள் காதில்  விழுந்துள்ளது. அவர்கள் வாலிபரிடம் வந்து, எதற்காக போலீசில் மாட்டத்தான் போகிறாய் என யாரை சொல்கிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்காமல் அந்த வாலிபர்கள் அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தவே உடனே உவரி போலீசிற்கு தகவல் தெரிவிக்கபட்டது. இரவு 9 மணியளவில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் கூட்டப்பனை சென்று தேடிப்பார்த்தனர். அப்போது காணாமல் போன சிறுமி இளவரசி அவர்கள் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டு காம்பவுண்ட்டிற்குள் இறந்து கிடப்பதை பார்த்தனர். அங்கு சென்று சிறுமி உடலை மீட்டனர். இளவரசி உடலில் தொடை மற்றும் மார்பில் கடித்து குதறிய காயங்கள் இருந்தது.

மேலும் அவரது ஆடை களையப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகரபிரசாத் கூட்டப்பனை சென்று சம்பவ இடத்தை பார்த்தார். மேலும் நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர் ஆனந்தி வந்து ரேகை பதிவு செய்தார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அப்பகுதியில் அங்கும் இங்கும் ஓடியதே தவிர யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இளவரசி உடலில் காயங்கள் இருப்பதால் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்சித்திருக்கலாம் அப்போது சிறுமி காமகொடூரன் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது அடித்து உதைத்திருக்கலாம், அடி தாங்காமல் அவர் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்துள்ளது. இருப்பினும் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இறுதி முடிவு தெரியவரும் என்றனர்.

இதற்கிடையில் இரவோடு இரவாக, நீ போலீசில் மாட்டிக்கொள்வாய் என பேசிய இரு வாலிபர்களையும் போலீஸ் நிலையம் பிடித்துச்சென்றனர். அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடக்கிறது. சிறுமி கொடூர கொலை சம்பவம் உவரி, திசையன்விளை பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உவரி, கூட்டப்பனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் திசை திருப்ப முயற்சியா?
 
சிறுமி இளவரசி இறந்த சம்பவத்தை போலீசார் தற்கொலை செய்ததாக கூறுகிறார்கள். அவர் வாயில் நுரை தள்ளி இருந்ததாம். இதனால் சிறுமி அங்கு சென்று விஷமருந்தியிருக்கலாம் என்கிறார்கள். இது பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி உடலில் காயங்கள் உள்ளன. மேலும் ஆடை களையப்பட்டு இருக்கிறது. காம்பவுண்ட் சுவர் கேட்டில் பூட்டு போடப்பட்டிருந்தது. அதையெல்லாம் உடைத்துக்கொண்டு சிறுமி எப்படி அங்கு செல்லமுடியும்? கொலையாளிகள் சம்பவம் நடந்தபின் வேண்டுமென்றால் சிறுமி வாயில் விஷத்தை ஊற்றி இருக்கலாம், அல்லது கொலை செய்வதற்கு முன் வலுக்கட்டாயமாக வாயில் விஷத்தை ஊற்றி இருக்கலாம் என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் ஈடுபட்டிருக்க முடியாது என கூறுகிறார்கள். போலீசார் தற்கொலை என திசை திருப்ப பார்ப்பது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : murder ,Uvari ,student ,murderer ,Raped Trial of 2 Plaintiffs Terror ,Plaintiffs ,Trial , Uvari, brutally murdered student
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...