பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த கொள்ளையன் முருகனிடம் இருந்து மீட்கப்பட்ட நாஜிக்கைகள் தங்களுடையது என பெங்களூரு நீதிமன்றத்தில் லலிதா ஜுவல்லரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரியில் மொத்தம் 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.13 கோடி ஆகும். இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 7 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகன், கணேஷ், சுரேஷ், மணிகண்டன், கனகவல்லி என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை விவகாரத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட முருகன் கடந்த 11ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதையடுத்து ஏற்கனவே பெங்களுருவில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்குகளில் முருகன் ஈடுபட்டிருந்ததால் பெங்களூரு போலீசார் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது ஒரு குறிப்பிட்ட அளவிலான நகையை தனது சொந்த ஊரான திருவாரூரில் புதைத்து வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.