திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் பத்திரிகையாளர் கடும் சிறைத் தண்டனையிலிருந்து விடுப்பு

ரபாத்: திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் பத்திரிகையாளர், மொராக்கோ மன்னர் மன்னிப்பு வழங்கிய பிறகு சிறைத் தண்டனையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். மொராக்கோ நாட்டில் திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவில் ஈடுபடுவது சட்டப்பூர்வ தண்டனைக்குரிய குற்றமாகும். அந்நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ராய்ஸவானி ஆகஸ்ட் 31 அன்று ஒரு கிளினிக்கிலிருந்து வெளியே வரும்போது சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் உறவில் ஈடுபட்டவர் தன் காதலர் என்றும் அவரையே விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ராய்ஸவானி கூறியதால் மன்னர் ஆறாம் முகம்மது மன்னிப்பு வழங்கினார். அந்த மன்னிப்பினால் கடும் சிறைவாசத்திலிருந்து ராய்ஸவானி தப்பித்துள்ளார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹஜர் ராய்ஸவானி (28) அரபு மொழியில் வெளியாகும் அக்பர் அல்-யாவும் என்ற செய்தித்தாளில் பணிபுரிகிறார். அவர் கடந்த ஆகஸ்ட் 31 அன்று ரபாத் நகரில் உள்ள ஒரு கிளினிக்கை விட்டு வெளியேறியபோது சட்டவிரோத கருக்கலைப்பு செய்தார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் கருக்கலைப்பு செய்துகொள்ளவில்லை என்று மறுத்தார். உள் ரத்தப்போக்குக்கு சிகிச்சை பெற்றதாகக் கூறினார். அவர் கூறியதற்கு மகளிர் மருத்துவ நிபுணரும் ஆதரவு தெரிவித்தார். ஆனால் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் கருக்கலைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவுகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ராய்ஸவானி மற்றும் அவரது சட்டவிரோத கருக்கலைப்பு செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைத் தண்டனையை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் உருவாகி போராட்டங்கள் வெடித்தன. ராய்ஸவானியும் அவரது நண்பரும் சட்டபூர்வமான திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள இருக்கிறார்கள் என்பது உறுதியான பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாதப் போராட்டத்திற்குப் பிறகு சூடான் மன்னர் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். இதனை அடுத்து பத்திரிகையாளர் ராய்ஸவானி அவரது வருங்காலக் கணவர், மகப்பேறு மருத்துவர், மயக்க மருந்து நிபுணர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கடும் சிறைத் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டன என்று நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள ராய்ஸவானி இந்த விவகாரத்தை ஒரு அரசியல் பழிவாங்குதல் என்று கண்டித்தார். தன் குடும்பம் மற்றும் சொந்த எழுத்து குறித்து காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

Related Stories: