அதிமுகவின் 48வது துவக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: அதிமுகவின் 48ம் ஆண்டு தொடக்க விழா தினத்தையொட்டி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சியின் துவக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் அவை தலைவர் மதுசூதனன், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சட்டசபையின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, தொடர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். கட்சியின் துவக்க விழாவை முன்னிட்டு, தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை முழுவதும் அதிமுக-வின் கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது தவிர, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிமுக செயல்பட்டு வரும் கட்சி அலுவலகங்களில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Related Stories: