கஞ்சா கடத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை 8 லட்சம் அபராதம்

சென்னை:அசாமில் இருந்து சென்னை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக சென்னை என்ஐபி சிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் பூவிருந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் சோதனை சாவடி அருகே கடந்த 27-11-2017 அன்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 11 மூட்டையில் பொட்டலங்களாக 249.200 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் லாரியில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட,  செல்வக்குமார் (28), மதி (42), ராஜா (38), ராமேஷ் (24) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை, போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பு நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பி.செந்தில் மூர்த்தி ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேர் மீதான குற்றம் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 2 லட்சம் என 8 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: