புதுடெல்லி: வாகன விற்பனை சரிவு காரணமாக, வார்பட உற்பத்தி தொழில்துறை கடும் பாதிப்பை அடைந்துள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியை அடுத்து ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டு வருகிறது. விற்பனை சரிவால் டீலர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பை சார்ந்த பல தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சுமார் 3.5 லட்சத்துக்கு மேல் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையை நம்பியுள்ள துறைகளில் வார்பட தொழிலும் ஒன்று. ஆண்டுக்கு 12 மில்லியன் டன் வார்ப்படங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 45 முதல் 50 சதவீதம் ஆர்டர்கள் ஆட்டோமொபைல் துறை சார்ந்தவை. எனவே, வாகன விற்பனை சரிவால் வார்ப்பட உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வார்ப்பட தொழில்துறை ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீதம் வளர்ச்சி பெற்று வந்தது. இதன்மூலம் 20 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.