போபால்: மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக கமல்நாத் இருந்து வருகின்றார். இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் சஜ்ஜன் வெர்மா, சட்டத்துறை அமைச்சர் பி.சி. சர்மா ஆகியோர் ஹபிப்கன்ஞ் ரயில் நிலையம் அருகே உள்ள சாலைகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சர்மா கூறுகையில், “சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. அம்மை நோய் ஏற்பட்டது போன்று ஆங்காங்கே தழும்புகளோடு, பாஜ பொது செயலாளர் விஜயவர்கியாவின் கன்னங்களை போன்று உள்ளது. முதல்வர் கமல்நாத் வழிகாட்டுதலில் பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் வெர்மா தலைமையில் 15 நாட்களில் சாலைகள் சீரமைக்கப்படும். 15 -20 நாட்களில் ஹேமாமாலினியின் கன்னங்கள் போன்று அழகான சாலைகள் அமைக்கப்படும்.